Thursday, 11 July 2013

மலேஷியாவில் முர்ஸிக்கு ஆதரவாக பேரணி

எகிப்தில் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியை மலேஷிய கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்டித்துள்ளன. அத்தோடு, எகிப்தில் அன்றாடம் இடம் பெற்றுவரும் நிகழ்வுகள் தம்மை கலக்கமடையைச் செய்துள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.

மலேஷிய இஸ்லாமிய நிறுவனங்களின் கூட்டமைப்பு, கோலாலம்பூரில் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டங்களில் பலர் கலந்து கொண்டுள்ளதோடு, எகிப்திய மக்கள் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதியை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் நடப்பதென்ன?

எகிப்தில் ஓர் இராணுவ சதிப் புரட்சி நடைபெற்றுள்ளது. அதன் எதிரொலிகள் கேட்ட வண்ணமுள்ளன. இராணுவத்தினர் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கலாநிதி முர்ஸியை கைதுசெய்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளதால் அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தெளிவான இராணுவ சதிப் புரட்சிதானா? அதன் பின்னணி என்ன?

ஆம் இது கடந்த சில மாதங்களாகத் திட்டமிடப்பட்டு, தற்போது நடாத்தி முடிக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சிதான் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டு ஜெனரல் ஸீஸியின் ஒவ்வொரு நகர்வும் அதனை நிரூபித்துள்ளன.

எகிப்திய இராணுவப் புரட்சி: சவூதி, அமெரிக்க, இஸ்ரேலிய முக்கூட்டுச் சதி

ஆறு தசாப்த கால இராணுவ சர்வதிகார ஆட்சிக்குப் பிறகு, முதற் தடவையாக ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மூர்ஸி, கடந்த 3 ஆம் திகதி இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

அரசியல் யாப்பை ரத்து செய்து, பொம்மை அரசாங்கம் ஒன்றை தற்போது இராணுவம் அமைத்திருக்கிறது. அரபு வசந்தத்தின் மூலம் பதவி துறந்த ஹுஸ்னி முபாரக் கால அரசியல் நிலமைகள் மீண்டும் நாட்டில் திரும்பியிருக்கின்றன. படையனர் எல்லா இடங்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன.

அல்ஜஸீரா தொலைக்காட்சியின் அரபு சேவை உள்ளடங்கலாக, பல தொலைக் காட்சி சேவைகள் மூடப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும், தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர். மூர்ஸிக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமைத்துவம் உட்பட, அதன் அங்கத்தவர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.