Monday, 16 January 2012

முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம்


முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

NHRC
புதுடெல்லி:உ.பி மாநிலத்தில் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம் நபரின்  போஸ்ட் மார்ட்டம் நடத்த காலதாமதம் செய்வது குறித்து விளக்கம் கேட்டு உ.பி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜவுன்பூர் மாவட்டத்தில் கொலைச் செய்யப்பட்ட ஒருவரின் போஸ்ட்மார்ட்டம் நடத்த காலதாமதம் ஏற்பட்டதால் அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது என பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இச்செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க அதிகாரிகளுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கெராக்கட் ரெயில்வே நிலையத்திற்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் அதிகாரிகளின் அலட்சியத்தால் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு ஒரு மாத காலம் தாமதமாகியுள்ளது. இச்செய்தி பத்திரிகையில் வெளியானதை தொடர்ந்து சுயமாகவே தேசிய மனித உரிமை கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டது.
மரணித்த நபரின் இறுதிச்சடங்குகளை தாமதப்படுத்துவது ஒரு நபரின் கண்ணியத்தின் மீதான சுதந்திரத்தை மீறுவதாகும். மேலும் முற்றிலும் மனித உரிமை மீறலுமாகும் என கமிஷன் கூறியுள்ளது.
கெராக்கட்டில் முனவ்வர்கான் என்பவரின் மகன் தில்வார் கடந்த 2011 நவம்பர் 14-ஆம் தேதி காணாமல் போனார். டிசம்பர் ஒன்றாம் தேதி அவரது இறந்த உடல் அருகில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதுத்தொடர்பாக கொலை வழக்கை பதிவுச்செய்த போலீஸ் மூன்றுபேரை கைது செய்தது. போஸ்ட்மார்ட்டம் தாமதமாவதாக செய்தி பத்திரிகையில் வெளியாகும் வரை முனவ்வர் தனது மகனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தார்களா? என்பது குறித்து விசாரிக்க லக்னோ, வாரணாசி, ஜவுன்பூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டு அழைக்கழிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment